2015-02-03 15:05:00

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை – பகுதி - 4


ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information Technology) பணிசெய்பவர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அவர்கள் வாங்கும் ஊதியம் பற்றிய கருத்துக் கணிப்பு அது. பல இளைஞர்கள், தாங்கள் வாங்கும் ஊதியம் பற்றி மகிழ்ச்சி என்று சொன்னார்கள். அதிலும், தாங்கள் அந்த இளவயதில் வாங்கும் ஊதியம், தங்கள் தந்தை முப்பது ஆண்டுகள் உழைத்த பின்னும் கிடைக்காத ஓர் ஊதியம் என்று தங்கள் நிலையைக் குறித்து மகிழ்ந்தார்கள். ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பின் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, அவர்களைப் போலவே படித்து முடித்த ஒரு சிலர் அவர்களை விட இன்னும் அதிகமாய் ஊதியம் பெறுகிறார்கள் என்ற செய்தியை அவர்களிடம் சொன்னபின், அவர்கள் முன்னர் காட்டிய மகிழ்ச்சி எல்லாம் மறைந்துபோய், அவர்கள் சோகமாய், கோபமாய் இருந்ததாக அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.

நாம் செய்கின்ற தொழிலுக்கு ஏற்ற ஊதியம் நமக்குக் கிடைக்கிறது அல்லது நமது தந்தையின் காலத்தைக் காட்டிலும் நமக்கு அதிகம் கிடைக்கிறது என்று எண்ணி மகிழ்வும், திருப்தியும் அடையும் நாம், நம்மைப் போலவே உழைக்கும் மற்றொருவர் இன்னும் அதிகம் பெறுகிறார் என்று தெரிந்ததும், அந்த மகிழ்வையும், திருப்தியையும் தொலைத்து விடுகிறோம். எரிச்சலும், கோபமும் எழுகின்றன. இதைவிடக் கொடுமை என்னவென்றால், நம்மை விடக் குறைவாக வேலைகள் செய்யும் ஒருவர், நமக்கு ஈடாக, அல்லது நம்மைவிட அதிக ஊதியம் பெறுகிறார் என்று தெரிந்தால், நமது கோபம் அதிகமாகிறது. நமது மகிழ்வும், மனநிறைவும் காணாமல்போய்விடுகின்றன.

சென்ற வாரம் நான் பகிர்ந்துகொண்ட அனுபவத்திற்கு மீண்டும் திரும்புவோம். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு அரைமணி நேரம் காத்திருந்த நான், முன்பதிவு செய்யும் சன்னலையும் நெருங்கிவிட்டேன். அந்தநேரம் மற்றொரு சன்னல் திறந்தது. வரிசையில் எனக்குப் பின் வந்து நின்றவர்கள் எனக்கு இணையாக, அல்லது எனக்கும் முன்னதாக தங்கள் பதிவை முடித்தனர். எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம்... என்று என் அனுபவத்தைக் கூறியிருந்தேன். இதையொத்த அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும், இல்லையா?

என்னுடைய வாய்ப்பு வரும்வரை பொறுமையாகக் காத்திருந்த நான், அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப்போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா? எனக்குப் பின் வரிசையில் வந்தவர் என்னையொத்தவராய் அல்லது என்னை மிஞ்சியவராய் மாறிவிடுகிறார் என்பது எனக்குள் கோபத்தை உருவாக்குகிறது.

என் ஊதியத்தை மட்டும் எண்ணிப் பார்த்து மகிழ்வும், மனநிறைவும் அடையும் நான், என்னைப் போல் உழைப்பவர், அல்லது என்னைவிட குறைவாக உழைப்பவர் என்னைவிட அதிக ஊதியம் பெறுகிறார் என்று அறிந்ததும் கோபம் கொள்கிறேன்; என் மகிழ்வைத் தொலைத்துவிடுகிறேன்.

இயேசு சொல்லியிருக்கும் திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதே போன்றதொரு கோபம் நமக்குள் எழுவதை உணரலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளி, நம் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் காரணமாகிறார்.

இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப்போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நடைமுறை வழக்கப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அவர்களும் தங்களுக்குப் பேசப்பட்ட கூலி கிடைத்தது என்ற திருப்தியில் சென்றிருப்பர். அதற்குப் பின், குறைவான நேரம் உழைத்தவர்களுக்கு சிறிது குறைவான கூலி கொடுத்திருக்கவேண்டும். அதற்குப் பதிலாக, திராட்சைத் தோட்ட உரிமையாளர், இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.

ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். அதேபோல், 9 மணிநேரம், 6 மணிநேரம் என்று உழைத்தவர்களும் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்று ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், நடந்தது என்ன? 12, 9, 6 மணிநேரம் உழைத்தவர்கள் கூலிபெற வந்த போது, பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும் அவர்களது ஏமாற்றம், கோபம் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.

மனம் நொந்துபோன பணியாளர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:

மத்தேயு நற்செய்தி 20: 10-15

முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவற்றைப்பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.

இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும் நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும் மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில் அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை செவிகொடுத்து, கவனமாகக் கேட்போம்.

மத்தேயு நற்செய்தி 20: 13-15

‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’

"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்கவிடாமல், நமது எண்ணங்களின்படி அவரைப் பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணங்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

நம் எண்ணங்களுக்கு ஏற்றதுபோல் கடவுள் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் பலமுறை எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி நடக்காதபோது கேள்விகள், கோபம், சந்தேகம் எல்லாம் கடவுள் மீது உண்டாகிறது. கடவுளின் குணங்கள் என்றதும், நாம் எதிர்பார்க்கும் அல்லது நமது மனங்களில் நாம் உருவாக்கியிருக்கும் கடவுளின் குணங்களை வைத்து இந்த உவமைகளைப் படித்தால், ஏமாற்றமும், அதிர்ச்சியுமே நமக்குக் காத்திருக்கும்.

கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்கமுடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்து விடுகிறோம். அந்த நேரத்தில் கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?

கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.