2015-01-31 16:24:00

துறவு வாழ்வு வாழ்வோருக்கு ஆப்ரிக்க ஆயர்கள் பாராட்டு


சன.31,2015. தலத்திருஅவைகளை உருவாக்கியதில் அர்ப்பண வாழ்வைத் தேர்ந்துள்ள அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்று தென் மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

தற்போது திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் அர்ப்பண வாழ்வு ஆண்டை முன்னிட்டு, தென்னாப்ரிக்கா, சுவாசிலாந்து, போஸ்ட்வானா ஆகிய மூன்று நாடுகளைச் சார்ந்த ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு துறவிகளைப் பாராட்டியுள்ளனர்.

தங்கள் நாடுகளில் மறைப்பணியாற்றி இறந்துள்ள அனைவருக்கும் தங்களின் மரியாதையைச் செலுத்துவதாகவும், இவர்களில் சிலரின் கல்லறைகள் மறக்கப்பட்டு மறைந்திருக்கலாம் எனவும் கூறியுள்ள ஆயர்கள், வாழ்நாள் எல்லாம் உழைத்து வயது காரணமாக ஓய்வில் இருக்கும் துறவிகளையும் தாங்கள் நன்றியோடு நினைப்பதாகக் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 02 அர்ப்பண வாழ்வு தினம். 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியிலிருந்து 2016ம் ஆண்டு பிப்ரவரி 02ம் தேதி வரை அர்ப்பண வாழ்வு ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

                                    

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.