பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தாய் தன் ஐந்து வயது மகளுடன் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அப்பெண் நிறையப் பொருட்களை வாங்கியிருப்பதைக் கண்ட கடைக்காரருக்கு மகிழ்ச்சி. கூடவே நின்றுகொண்டிருந்த அவரது மகளைப் பார்த்த கடைக்காரர், மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு நீயே மிட்டாய்களை எடுத்துக்கொள்" என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம், "எனக்கு மிட்டாய் மிகவும் பிடிக்கும்" என்று சொன்னாள். ஒருவேளை மிட்டாய்களை எடுக்க சிறுமி வெட்கப்படுகிறாள் என்று எண்ணியக் கடைக் காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, கை நிறைய மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். சிறுமி இருகைகளிலும் அம்மிட்டாய்களைப் பெற்றுக் கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?" என்று தாய் கேட்டார். அதற்கு, அந்தச் சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள்.
குழந்தைகள் மனதில் சிந்தனைகளை, ஆசைகளை விதைப்பது, பெரியவர்களே!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |