2015-01-26 15:21:00

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்


சன.26,2015. இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு முயற்சிக்க வேண்டும் என்று யாழ் மறைமாவட்ட ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு, இந்த வேண்டுகோளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ள ஆயர் தாமஸ், ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளை வேன் கடத்தல் மற்றும் இறுதிப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பாக உடன் விசாரணை நடத்தப்படல் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் :  ஆதவன்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.