2015-01-24 15:42:00

திருத்தந்தை - கர்தினால்கள் பணி செய்வதற்கு அழைப்பு


சன.24,2015. கர்தினால்கள் பணி செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று, இம்மாதத்தில் தான் அறிவித்துள்ள புதிய கர்தினால்களிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற பிப்ரவரி 14ம் தேதி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கர்தினால்கள் அவையில் புதிய கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கும் இருபது புதிய கர்தினால்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்களின் அழைப்பைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கர்தினால் பதவியை ஒரு பரிசாக, அதிகாரத்தில் முக்கிய பதவியாக அல்லது இதனை ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்றாகப் பொது மக்கள் கருதுகின்றனர், இத்தகைய எண்ணத்திலிருந்து கர்தினால்கள் ஒவ்வொரு நாளும் ஒதுங்கி வாழ்வதற்கு முயற்சிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.

பணிசெய்யும்போது தாழ்ச்சியுடன் இருப்பது கடினம் என்றும், கர்தினால்களாக உயர்த்தப்படும் நிகழ்வை நண்பர்களும், குடும்பமும், விசுவாசிகளும் கொண்டாட விரும்புவார்கள், ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் வெகு ஆடம்பரமாக இருப்பதைத் தவிர்க்குமாறும் பரிந்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.