2015-01-22 16:47:00

"அல்லா" என்ற சொல் குறித்த தீர்ப்பு, மலேசிய ஆயர்கள் கவலை


சன.22,2015. மலேசியாவில் கடவுளைக் குறிப்பதற்கு "அல்லா" எனும் சொல்லை கத்தோலிக்கர் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி பதிவு செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இரத்து செய்திருப்பது குறித்த கவலையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

மலேசிய உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்மானம், அந்நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் மெல்ல மெல்லக் குறைக்கப்படும் மற்றும் சமய விவகாரங்களில் அரசின் தலையீடு அதிகரிக்கும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் கோலாலம்பூர் போராயர் Julian Leow.

ஹெரால்டு இதழ் தொடர்ந்திருந்த வழக்குக்கு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு அந்த இதழுக்கு மட்டுமே என்றும், இத்தீர்ப்பு, சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படாது என்றும் தான் நம்புவதாகத் தெரிவித்தார் போராயர் Julian Leow.

அறுபது விழுக்காட்டு முஸ்லிம்களைக் கொண்டுள்ள மலேசியாவில், புத்தமதத்தினருக்கு அடுத்த எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் உள்ளனர். கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல், உள்ளூர் மொழி விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இலத்தீன்-மலாய் அகராதியில் காண முடிகின்றது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.