ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க, தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.
"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.
முல்லா, தலைவரிடம், "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.
தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய தலைவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில், முல்லா, கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும், அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
முல்லா, நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?" என்று.
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா, அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க, நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.
அறிவிருக்குமிடத்தில், விடுவிக்க முடியாத புதிர் என்றோ, சிக்கல் என்றோ எதுவும் இல்லை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |