2015-01-10 15:57:00

திருஅவையின் செயல்களில் மனிதர் மையப்படுத்தப்படுகின்றார்


சன.10,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றபோதிலும், இன்னும் நிறையப் பணிகள் ஆற்ற வேண்டியிருக்கின்றன என்பதை நாம் புறக்கணிக்கக் கூடாது என்று இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று கூட்டம் நடத்திய 100 பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மனிதர், திருஅவை ஒன்றிப்பு, தலத்திருஅவை ஆகிய மூன்று உறுதியான தூண்களில் ஹெய்ட்டியில் நாம் இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் அமைந்துள்ளன என்று கூறினார்.

நாம் இப்போது சிறப்பித்து முடித்துள்ள கிறிஸ்மஸ், மனிதர் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துகின்றது என்றும், ஒவ்வொரு மனிதரையும் முழுமையாகக் கட்டியெழுப்பாமல் அந்நாட்டில் உண்மையான கட்டியெழுப்புதல் கிடையாது, திருஅவையின் செயல்களில் மனிதர் மையமாக இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

திருஅவையின் பல பிறரன்பு மற்றும் துறவு நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றிப்பு அவசியம் என்றும், இவை ஒவ்வொன்றும் தங்களின் வழியில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றன, ஆயினும், பிறரன்பு என்பது பிறருக்கு உதவுவது மட்டுமல்ல, ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்குத் தடையாய் இருப்பவைகளைத் தகர்த்து ஒன்றிணைந்து செய்வதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஹெய்ட்டியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஊக்குவித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, இதில் ஈடுபட்டுள்ள ஹெய்ட்டி ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பிறர் இப்பிறரன்புப் பணிகளில் நற்செய்திக்குச் சாட்சிகளாகத் திகழுமாறும் கேட்டுக்கொண்டார்.

“திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வு : ஹெய்ட்டியில் நிலநடுக்கம் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் அதன் நினைவுகளும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் இக்கூட்டம் வத்திக்கானில் நடைபெற்றது.

திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அமைப்பு, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை, ஹெய்ட்டி ஆயர்கள் பேரவை ஆகியவற்றின் முயற்சியினால் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர், மூன்று இலட்சம் பேர் காயமடைந்தனர் மற்றும் 12 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.