2015-01-09 14:53:00

சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் திருத்தூது ஏடு


சன.09,2015. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது ஏடு இந்த ஆண்டு கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கானத் திருத்தூதுப் பயணம் பற்றி பத்திரிகையாளர்களிடம் விளக்கியபோது சுற்றுச்சூழல் பற்றிய இத்திருத்தூது ஏடு பற்றியும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

சுற்றுச்சூழல் பற்றிய திருத்தூது ஏடு இன்னும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறிய அருள்பணி லொம்பார்தி, சுற்றுச்சூழல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிப் பேசி வருவதையும் குறிப்பிட்டார்.

எனினும், இத்திருத்தூது ஏட்டைத் தயாரிப்பதற்கு அதிக காலம் தேவைப்படுவதால், இது வருகிற கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.