சன.07,2015. இந்தியாவின் புகழ்பெற்ற இறையியலாளர், இயேசு சபை அருள்பணி சாமுவேல் இராயன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக, நான்கு நாள் தேசியக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளனர் இந்திய இறையியலாளர்கள்.
கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில், 94 வயது நிரம்பிய அருள்பணி இராயன் அவர்களைப் பாராட்டிப் பேசிய, கேரள இயேசு சபை மாநில அதிபர் அருள்பணி M.K. George அவர்கள், அருள்பணி இராயன் அவர்கள் சிந்தனையாளர் மற்றும் படைப்புத்திறன்மிக்க கவிஞர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், இக்கருத்தரங்கில் பேசிய தெற்காசிய இயேசு சபை அதிபர் அருள்பணி George Pattery அவர்கள், அருள்பணி இராயன் அவர்களின் எழுத்துக்கள் உண்மையிலேயே இறைவாக்குப் பண்பு கொண்டவை மற்றும் படைப்புத்திறன் மிக்கவை எனப் பாராட்டினார்.
கேரளாவின் கும்பளம் என்ற ஊரில் 1920ம் ஆண்டு பிறந்த அருள்பணி இராயன் அவர்கள், 1939ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். 1971ம் ஆண்டில் டில்லி வித்யஜோதி இயேசு சபை இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். 94 வயது நிரம்பிய இவர் தற்போது காலடி எனுமிடத்தில் வாழ்ந்து வருகிறார்.
அருள்பணி இராயன் அவர்கள், பல்வேறு பன்னாட்டு கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உரையாற்றி இருக்கிறார். இவரது எழுத்துக்கள் எப்போதும் ஒருவித புதிய கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பவை.
ஆதாரம் : UCAN
All the contents on this site are copyrighted ©. |