டிச.30,2014. கானடாவில் 2014ம் ஆண்டில் 2,60,000க்கும் அதிகமான மக்கள், கானடாக் குடியுரிமையைப்
பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது
ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக அந்நாட்டுக் குடியுரிமையை பெற்றுள்ளணர் என்று, மத்திய
குடியேற்ற மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். மேலும்,
இந்த எண்ணிக்கை கடந்த வருடம் கனேடியக் குடியுரிமையைப் பெற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம்
என்றும், கானடா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடைமுறைகளில்
அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தப் புதிய நடைமுறையில், குடியுரிமை
விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒருபடிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்
இந்த நடைமுறையால் இதுவரை 1,15,000ற்கும் அதிகமானோர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும்,
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 விழுக்காடு அதிகம் எனவும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.