டிச.30,2014. 2017ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதித்தியா விண்கலத்தை,
சூரியனுக்கு அனுப்ப இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.இராதாகிருஷ்ணன்
அவர்கள் தெரிவித்தார். சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் உட்பட 12க்கும் மேற்பட்ட
திட்டங்களை இஸ்ரோ நிறுவனம் கொண்டிருப்பதாகவும் கே.இராதாகிருஷ்ணன் அறிவித்தார். மேலும்,
பெங்களூருவில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான அனைத்துலக கருத்தரங்கில் பேசிய
மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், விண்வெளித் துறையில் இந்தியா
அண்மைக் காலமாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. எந்த ஒரு புதிய முயற்சியின்போதும்
பல்வேறு தடைகள் ஏற்படும். அவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார். மங்கள்யான்
பயணத்தை இந்திய அறிவியல் வல்லுனர்கள் 13 மாதங்களில் திட்டமிட்டு, குறைந்த நிதிச் செலவில்
விண்கலத்தை அனுப்பி வைத்தனர். ஆனால், அறிவியலில் வல்லரசாக திகழும் அமெரிக்கா, இதேபோன்ற
விண்கலத்தை அனுப்ப 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.