குடும்பத்தில் பிறந்த
ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து,
குடும்பத்தையும், குழந்தைகளையும் கொண்டாடும் இரு திருநாள்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின்
பிறந்தநாளைத் தொடரும் ஞாயிறு, திருக்குடும்பத் திருநாள் என்றும், டிசம்பர் 28, மாசற்றக்
குழந்தைகள் திருநாள் என்றும் கொண்டாடப்படுகின்றன. இவ்வாண்டு, டிசம்பர் 28ம் தேதி, ஞாயிற்றுக்
கிழமை என்பதால், இவ்விரு திருநாள்களும் இணைந்து வந்துள்ளன. குடும்பங்களையும், குடும்பங்களின்
அடித்தளமாக, எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளையும் இணைத்து எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பு
நமக்குத் தரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு சோகமும் நம்மைத்
தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதுதான், எதிர்பாராமல் நம்மைத் தாக்கிய சுனாமியின் நினைவு. சரியாக
பத்தாண்டுகளுக்கு முன்னர், 2004ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு விழா, சனிக் கிழமையன்று
வந்தது. அதற்கடுத்த நாள் டிசம்பர் 26, ஞாயிறன்று, திருக்குடும்பத் திருவிழா வந்தது. 2004ம்
ஆண்டு திருக்குடும்பத் திருவிழாவன்று, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய
சுனாமி, 2,30,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துச் சென்றது. பல இலட்சம் குடும்பங்கள்
சிதைக்கப்பட்டன. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது. ஆயினும்,
அந்த அழிவை, கண்ணீரைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல்லாயிரம் புதுமைகளும் நடந்தன. இந்தப்
புதுமைகளில் ஒரு சில, ஊடகங்களில் வெளி வந்தன. ஆனால், பல்லாயிரம் புதுமைகள், வார்த்தைகளாய்,
செய்திகளாய் வெளிவராமல், மௌனமாகச் செயல் வடிவம் பெற்றதும் உண்மைதான்.
திருக்குடும்பத்
திருநாள், சுனாமிப் பேரழிவு என்ற இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத்
திருஅவையில் திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு, அழிவுகளே முக்கிய காரணமாயின என்ற
வரலாறு, நம் நினைவில் நிழலாடுகிறது. பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள்
தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு,
திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் திருஅவையின் திருநாளாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு சில ஆண்டுகளில், திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை
11ம் பயஸ் அவர்களால், மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய
காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல்
நடந்து முடிந்த உலகப்போரில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ,
மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன.
இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை
மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.
1962ம்
ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப்
பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம் அன்றைய உலகின் நிலை.
முதலாம், இரண்டாம் உலகப் போர்களால், கட்டிடங்களைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன...
வேறு பல வடிவங்களில் குடும்பங்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில்
மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது.
ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம் நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப்
பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர்.
அந்த அமைதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. குடும்ப
உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத்
திருநாளாக, திருஅவை அறிவித்தது. பகைமை உணர்வுகள் போர்களாக வெடித்தபோது, மனிதர்கள்
கட்டியெழுப்பிய பல கட்டிடங்கள் தரைமட்டமாயின. அவற்றிற்கும் மேலாக, அவர்கள் கட்டியெழுப்பிய
குடும்பங்கள் சிதைந்துபோயின. இந்த அழிவுகளை, கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப்
பதிலாக, எல்லாம் அழிந்தது என்று மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, கத்தோலிக்கத் திருஅவை,
மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது. அந்த வழிகாட்டுதலின்
ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.
பத்தாண்டுகளுக்கு
முன், நாம் அனுபவித்த சுனாமி என்ற பேரழிவும், ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கியது என்பதை
மறுப்பதற்கில்லை. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த நம்பிக்கை தரும் பல செய்திகளில், என்
மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு செய்தி... நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சூடாமணி
தம்பதியரைப் பற்றியச் செய்தி. தங்கள் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, குடும்பத்தில்
பத்து பேரை, சுனாமியில் இழந்தவர்கள், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர். டிசம்பர் 26, பரமேஸ்வரனின்
பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, மூன்று குழந்தைகளுடனும்,
ஏழு உறவினர்களுடனும் சென்றார் பரமேஸ்வரன். அவ்வேளையில் வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும்
மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பின்னர் வாழ்வதில்
பொருளில்லை என்று பரமேஸ்வரன் அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபோது, சூடாமணி
அவர்கள் மாற்றுவழியைக் காட்டினார். நம்பிக்கை இழந்து, வெறுப்புடன் இவ்வுலகிலிருந்து விடை
பெறுவதற்குப் பதில், ஒரு புதுமையை அவர்கள் ஆரம்பித்தனர். அந்தச் சுனாமியால் பெற்றோரை
இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். குழந்தைகளின்
மதம், இனம், இவற்றையெல்லாம் கடந்து மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத்
தத்தெடுத்தார்கள். 3 வயது முதல் 14 வயது வரை உள்ள 16 குழந்தைகளுடன், 'நம்பிக்கை' என்ற
பெயருடன் ஆரம்பமான இக்குடும்பத்தில், இன்று 37 குழந்தைகள் உள்ளனர். ஒரு கண்ணோட்டத்தில்
பார்க்கும் போது, இதுவும் ஒரு திருக்குடும்பம் தானே!
இயேசு, மரியா, யோசேப்பு என்ற
திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால்,
அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் புனிதமாக, பெருமை
தருவதாக இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு
அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும்
அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே! டிசம்பர் 24, இப்புதன் மாலை நான்கு
மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின் Erbil நகருக்கருகே அமைந்துள்ள
Ankawa என்ற முகாமில் தங்கியுள்ள புலம் பெயர்ந்தோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்
கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திருத்தந்தை வழங்கியச் செய்தியில், "பிறப்பதற்கு
ஓர் இடமின்றி வாடிய இயேசுவைப்போல, நாடுவிட்டு நாடு புலம் பெயர்ந்த இயேசுவின்
குடும்பத்தைப் போல வாழ்ந்துவரும்நீங்கள், இந்த கிறிஸ்மஸ் காலத்தில் இயேசுவுடன்
இன்னும் நெருக்கமாக ஒன்றித்திருக்கிறீர்கள். உங்கள் நடுவில் வாழும் குழந்தைகளைப்போல,
இயேசுவும் மென்மையான, அப்பழுக்கற்ற ஒரு குழந்தையாக நம்மிடம் வருகிறார்.
உங்கள் நடுவில் உள்ள குழந்தைகளைச் சிறப்பாக எண்ணிப்பார்க்கிறேன். இவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்;
மேலும் பலர் கொடுமைகளுக்கு உள்ளாயினர். உங்கள் நடுவே வாழும் முதியோரையும்
சிறப்பாக எண்ணிப்பார்க்கிறேன். குழந்தைகளுக்கும், வயதில் முதிர்ந்தோருக்கும்,
உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் ஆசீரை வழங்குகிறேன்"
என்று திருத்தந்தை, தொலைபேசி செய்தியில், தன் உள்ளத்து உணர்வுகளை வெளியிட்டார்.
பச்சிளம்
குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை
அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கினர்.
ஏரோதுகளின் சுயநல வெறிக்கு, குழந்தைகள் பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே! பத்து நாட்களுக்கு
முன், (டிசம்பர் 16), பாகிஸ்தானில், தாலிபான்களின் கண்மூடித்தனமான வெறியால், பெஷாவர்
பள்ளிச் சிறுவர்கள், சுட்டு வீழ்த்தப்பட்டது இன்னும் நம் உள்ளங்களில் இரணமாக வலிக்கிறதே!
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு
பசிலிக்காப் பேராலய மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும், 'ஊருக்கும்
உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், குழந்தைகளைப் பற்றிய தன் எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக
வெளிப்படுத்தினார். “என் எண்ணங்கள் இன்று குழந்தைகள் பக்கம் திரும்புகின்றன.
கொல்லப்படும், தவறாக நடத்தப்படும் குழந்தைகளை நோக்கி திரும்புகின்றன. அதேவேளை,
பிறக்கும்முன்னரே இறக்கும் குழந்தைகளையும் எண்ணிப்பார்க்கிறேன். உலகின் சுயநலக்
கொள்கைகளால், தங்கள் பெற்றோரின் அன்பை உணர்வதற்கு முன்னரே இவர்கள் உயிரிழக்கின்றனர்.
பல குழந்தைகள், போராலும், சித்திரவதைகளாலும், வேறு
பல தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதாலும் நம் கண்முன்னே, நம்முடைய மௌன
சம்மதத்தால் உயிரிழந்துள்ளனர். இன்றும், இறைமகன் பிறந்த பாலஸ்தீன மண்ணில்,
குழந்தைகள் சின்னாபின்னமாகின்றனர். இக்குழந்தைகளின் சக்தியற்ற மௌனம், பல
ஏரோதுகளின் வாள்களையும் மீறி, அலறுகின்றது. இன்றும் ஏரோதுகள் நம் மத்தியில்
முகாமிட்டிருப்பது, இக்குழந்தைகளின் இரத்தத்தில் வெளிச்சமாகிறது.இந்தக் கிறிஸ்மஸ் விழாவில் எண்ணற்ற கண்ணீர்த் துளிகள் உள்ளன, குழந்தை
இயேசுவின் கண்ணீர்த் துளிகளும் அதில் இணைந்துள்ளன.”
கிறிஸ்மஸ் காலம்,
குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம் என்றாலும், குடும்பமாகக் கூடி வாழ முடியாதவர்களையும்
அது நமக்கு நினைவுருத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள்,
திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன்
முதல் கிறிஸ்மஸை, கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள்
அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. சுனாமி தந்த காயங்களை, பேரலையாய் வந்து நம்
நம்பிக்கையை துடைத்துச் சென்ற அந்த ஆழிப் பேரலையை மாற்றி, அந்த அழிவு நாளை நம்பிக்கைத்
தரும் நாளாக மாற்றியுள்ளது, பரமேஸ்வரனும், சூடாமணியும் உருவாக்கியிருக்கும் 'நம்பிக்கை'
என்ற குடும்பம். அதேபோல், தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி புனிதத்தையும்
பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர்
துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால் தான் கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக
மாறியுள்ளது. மலை போல, அலை போல துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற,
சில நூறு மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து
பிறப்புப் பெருவிழா, திருக்குடும்பத் திருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா ஆகிய அனைத்தும்,
துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக நம் மத்தியில்
வலம் வருகின்றன.