2014-12-26 15:52:54

புனித பூமியில் யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சமத்துவத்துடன் வாழ அழைப்பு


டிச.26,2014. புனித பூமியில் யூதர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சம உரிமை பெற்றவர்களாக, சமத்துவத்துடன் ஒன்றிணைந்து வாழுமாறு கேட்டுக்கொண்டார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
இயேசு பிறந்த பெத்லகேம் நகரின் இயேசு பிறப்பு பசிலிக்காவில் கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், புனித பூமி, சண்டையின் நிலமாக மாறியுள்ளது என்ற கவலையையும் தெரிவித்தார்.
எருசலேமிலும், காசாவிலும் இடம்பெற்ற வன்முறையைக் குறிப்பிட்டு, இந்தத் துன்பம் நிறைந்த 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டு துன்பங்களற்ற நல்ல ஆண்டாக அமையும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் முதுபெரும் தந்தை Fouad Twal.
மேற்குக் கரையிலும், அதைச் சுற்றிலும் இஸ்ரேல் எழுப்பிவரும் பிரிவினைச் சுவர் குறித்தும் மறையுரையில் குறிப்பிட்ட முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், அடுத்த ஆண்டில் இந்தப் பிரிவினைச் சுவர் இருக்காது, மாறாக, அமைதியின் பாலங்கள் அமைந்திருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனிய புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற ஐம்பது நாள் சண்டையில் புலம்பெயர்ந்துள்ள 19,600 காசாக் குடும்பங்களைக் கிறிஸ்தவர்கள் மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார் முதுபெரும் தந்தை Fouad Twal.
இந்தப் பிரிவினைச் சுவர் எருசலேமிலிருந்து பெத்லகேமைப் பிரிக்கின்றது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.