திருத்தந்தை மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் ஒரு தெய்வ உரை
டிச.26,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கென
எழுதிய கடிதம், இறைவனின் மொழியாக, துணிச்சல் மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது என்று
ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் கடிதம், மிக அழகான மற்றும் உள்ளத்தை உருக்கும் ஒன்றாகவும், ஈராக்
மக்களுடனும் முகாம்களில் கிறிஸ்மஸைக் கொண்டாடிய கிறிஸ்தவர்களுடனும் மிகுந்த அன்புறவைக்
காட்டுவதாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ. துன்புறும்
மக்களை நினைத்து திருத்தந்தை மிகுந்த வேதனைப்படுவதை அக்கடிதத்தில் உணர முடிகின்றது என்றும்,
இக்கடிதத்தின் மூலம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவர் மற்றும் ஒரு
தந்தை என்ற தனது நிலையை நிறைவு செய்வதாக உள்ளது என்றும் மேலும் கூறினார் முதுபெரும் தந்தை
சாக்கோ. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் மற்றும் மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கென
இம்மாதம் 23ம் தேதி ஒரு நீண்ட மடல் எழுதினார். அதில், அப்பகுதியில் துன்புறும் பிற சிறுபான்மை
மதத்தவருக்கும், இனத்தவருக்கும் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், செபத்தையும் தெரிவித்திருக்கிறார்.