திருத்தந்தை : கிறிஸ்தவ விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்படும் எல்லாருக்காகவும் செபிப்போம்
டிச.26,2014. “தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்படும் அனைவருக்காகவும்
இன்று செபிப்போம்”என்ற வார்த்தைகளை, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஏறக்குறைய தினமும் ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுவரும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் விழாவாகிய
இவ்வெள்ளியன்று, கிறிஸ்தவ விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்படும் எல்லாருக்காகவும் செபிக்குமாறு
கேட்டுள்ளார். மேலும், டிசம்பர் 28, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப
விழாவை முன்னிட்டு, ஏறக்குறைய ஏழாயிரம் குடும்பத்தினரை, வத்திக்கான் முத்திப்பேறு பெற்ற
திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு,
மரியா, யோசேப்பு ஆகிய மூவரையும் கொண்ட திருக்குடும்ப விழாவான டிசம்பர் 28ம் தேதியன்று
மாசற்ற குழந்தைகள் விழாவும் சிறப்பிக்கப்படுகிறது.