குமரி மாவட்டத்தில் புதிய மறைமாவட்டமும் புதிய ஆயரும்
டிச.22,2014. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியைக்கொண்டு
குழித்துறை என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புதிய
மறைமாவட்டத்தின் முதல் ஆயராக சலேசிய சபை அருள்பணியாளர் ஜெரோம்தாஸ் வறுவேலை நியமித்துள்ளார்
திருத்தந்தை. தமிழகத்தின் தென்கோடி மறைமாவட்டமான கோட்டாறிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள
குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் ஜெரோம்தாஸ்
அவர்கள், 1951ம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தின் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்து, முதலில்
கோட்டாறு மறைமாவட்ட இளங்குருமடத்தில் பயன்றார். சென்னை பூந்தமல்லி திரு இதயக் குருத்துவக்
கல்லூரியில் மூன்றாண்டு தத்துவயியல் கற்றபின், சலேசிய துறவுசபையில் இணைந்தார். உரோம்
நகர் சலேசிய பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக் கற்றபின் 1985ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். சலேசியத்
துறவுசபையில் இணைந்து பல்வேறுப் பொறுப்புகளை வகித்துள்ள புதிய ஆயர் ஜெரோம்தாஸ் அவர்கள்,
தற்போதுவரை ஏலகிரி மலையில் சலேசிய நவதுறவியர் இல்ல அதிபராக பணியாற்றி வந்துள்ளார்.