இரு கொரிய நாடுகளும் ஒன்றிணைவதற்கு செயோல் கர்தினால் செபம்
டிச.20,2014. ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கை மற்றும் ஒப்புரவு மூலம் இரு கொரிய நாடுகளும்
ஒரு பெரிய குடும்பமாக மாற வேண்டும் என்று தான் செபிப்பதாக, தனது கிறிஸ்மஸ் செய்தியில்
குறிப்பிட்டுள்ளார் தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung. இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள
கிறிஸ்மஸ் செய்தியில் இரு கொரிய நாடுகளும் ஒன்றிணைவதற்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்
செயோல் கர்தினால் Soo-jung. மேலும், அர்ஜென்டீனா ஆயர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ்
செய்தியில், அந்நாட்டை மேலும் மேலும் உடன்பிறப்பு உணர்வில் கட்டியெழுப்புமாறு வேண்டுகோள்
விடுத்துள்ளனர். அமைதி என்னும் கொடை, நல்மனம் கொண்ட அனைவருக்கும் எப்போதும் வைக்கப்படும்
ஒரு சவால் என்பதை உணர்ந்து, அர்ஜென்டீனா மக்கள் அமைதிக்காக உழைப்பதற்கு இன்னும் அதிகமாகத்
தங்களை அர்ப்பணிக்குமாறும் கேட்டுள்ளனர் ஆயர்கள். போதைப்பொருள் பரவலை இந்நாட்டினர்
கண்டும் காணாததுபோல் உள்ளனர் என்றும் கூறியுள்ள அர்ஜென்டீனா ஆயர்கள், திருஅவை இந்தச்
சமூக வடுவுக்கும், வன்முறைக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.