2014-12-17 16:23:24

திருத்தந்தையின் பயணத்தையொட்டி, பிலிப்பின்ஸ் கம்யூனிசப் போராளிகள், ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு


டிச.17,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தையொட்டி, அந்நாட்டின் கம்யூனிசப் போராளிகள், ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
பிலிப்பின்ஸ் கம்யூனிசக் கட்சி என்றழைக்கப்படும் இந்தப் போராளிகள் அமைப்பு, கிறிஸ்மஸ், புத்தாண்டு, திருத்தந்தையின் வருகை ஆகிய நிகழ்வுகளையொட்டி, டிசம்பர் 24 முதல் 26 முடியவும், டிசம்பர் 31, சனவரி 1 ஆகியத் தேதிகளிலும், சனவரி 15 முதல் 19ம் தேதி முடியவும் ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, பிலிப்பின்ஸ் நாட்டிற்கு உண்மையானக் கொண்டாட்டமாக அமைவது தங்கள் விருப்பம் என்று இவ்வாமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, டிசம்பர் 18, இவ்வியாழன் முதல், திருத்தந்தையின் மேய்ப்புப்பணிப் பயணத்தின் இறுதி நாளான, சனவரி 19ம் தேதி முடிய, அரசுத் தரப்பில் கம்யூனிசப் போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெறாது என்று பிலிப்பின்ஸ் அரசு தெரிவித்துள்ளதாக UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.