டிச.16,2014. இந்து அமைப்புகள், கிறிஸ்மஸ் தினத்தன்று மதமாற்ற நிகழ்வை நடத்தத் திட்டமிட்டிருப்பதற்குத்
தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய ஆயர் ஒருவர். இந்திய மத்திய அரசோடு
சேர்ந்த CBSE பள்ளிகளைத் திறக்கும் அரசின் திட்டம் உட்பட, கிறிஸ்மஸ் பெருவிழா நாளில்
நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள்
கவலைதருவதாக உள்ளன என்று கூறியுள்ளார் டில்லி பேராயர் அனில் கூட்டோ. உலகிலும் நாட்டிலும்
அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்காகச் செபிக்கும் நாள் கிறிஸ்மஸ் என்றும், இது ஒரு
கொண்டாட்ட நாள் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார் பேராயர் கூட்டோ. மேலும், இச்செவ்வாயன்று
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கட்டாய மதமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து
'மதத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்' என கோஷமிட்டனர். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக
பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர் என ஊடகச்
செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில், மாநிலங்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, "டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லாட்சி
தின கொண்டாட்டத்திற்காக பள்ளிகளை இயங்குமாறு தெரிவிக்கவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது,
ஆனால் அன்றைய தினம் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்துமாறு உத்தரவிட்டு மத்திய அரசு
அனுப்பிய சுற்றறிக்கை என்னிடம் உள்ளது. அதை அவையில் தாக்கல் செய்ய விரும்புகிறேன்" என்று
கூறியுள்ளார்.