2014-12-15 15:11:25

வாரம் ஓர் அலசல் – வாழ்க்கை இனியதாக அமைய....


டிச.15,2014. நாடுகளில் கனமழை, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, கடும்புயல், கடும் வறட்சி போன்ற சொற்களை கடந்த பல ஆண்டுகளாக அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். கடந்த வாரத்தில்கூட இந்தோனேஷியாவின் ஜாவா மாநிலத்தில் பல நாள்கள் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஒரு மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் Jemblung கிராமத்தில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளனர், 80 பேர்வரைக் காணவில்லை என்று இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன. எனவே இப்பூமியின் பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கடந்த இரு வாரங்களாக பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் உலக மாநாடு ஒன்று நடந்தது. அதில் 196 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சூடான விவாதங்களுக்குப் பிறகு, இஞ்ஞாயிறு காலையில், பருவநிலை மாற்றம் குறித்த வரைவு ஒப்பந்தத்துக்கு இதில் இசைவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் புவி வெப்பநிலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஐ.நா.விடம் அறிக்கை அளிக்க உறுதி அளித்துள்ளன. இதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு டிசம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் மாநாட்டில், பருவநிலை மாற்றம் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றப்படுவதை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் லீமா மாநாட்டு வரைவு ஒப்பந்தம் வரலாற்றில் முதன்முறையாக எட்டப்பட்டது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இப்புவியில் மக்கள் நலமாக, மகிழ்வாக வாழ்வதற்கு பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மக்கள் நலமாக, மகிழ்வாக வாழ்வதற்கு உதவும் மற்றொரு நடவடிக்கையையும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை கடந்த வாரத்தில் எடுத்துள்ளது. டிசம்பர் 11, கடந்த வியாழக்கிழமையன்று ஐ.நா. பொது அவை, அனைத்துலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இசைவு தெரிவித்துள்ளது. இந்த உலக நாள், ஜூன் 21ம் தேதி எனவும் அறிவித்துள்ளது. 193 நாடுகள் இதற்கு ஒரே மனதாக வாக்களித்திருப்பது ஒரு சாதனை என செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. யோகாவினால் நலவாழ்வுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் ஐ.நா. பொது அவை பரிந்துரைத்துள்ளது. இத்தினம் கொண்டுவரப்படுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பங்கு பெரிது எனவும் சொல்லப்பட்டுள்ளது. யோகாப் பயிற்சி முறைகள், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியவை. இவை உடலும் மனமும் நலமாக வாழ உதவுகின்றன என்பதில் சந்தேகமே கிடையாது.

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உடலும் உள்ளமும் நலமுடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில், நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும், வகைவகையான உணவு, வசதியான வீடு, வாகனம், வெளிநாட்டுப் பயணம் என நிறைய இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றே மனிதர் ஓடுகின்றனர். நவீன மருத்துவம் வளர்ந்து ஆயுளை அதிகரித்துள்ளதே தவிர, மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாள்களை அதிகரிக்கவில்லை. நவீன வசதிகள் நிறைய இருந்தும் மனிதருக்கு வாழத் தெரியவில்லை. நிறைய பணம் இருக்கின்றது, அதேநேரம் திருமண முறிவுகளும் அதிகரித்துள்ளன. நிலையான குடும்ப அமைப்புகளும் குறைந்து வருகின்றன. நான்கு வழிச்சாலைகள் அதிகரித்துள்ளன, ஆனால் மனிதரின் மனச்சாலைகள் குறுகி வருகின்றன. தொழிலில் இலாபங்கள் அதிகம், ஆனால் தர்மங்கள் குறைவு. இந்நிலைகள் பல நேரங்களில் நிம்மதியான தூக்கத்தையே கெடுத்து விடுகின்றன. அதன்பின்னர் நிம்மதியைத் தேடி, உளவியல் மையங்களையும், ஆன்மீக வழிகாட்டிகளையும் மக்கள் நாடுகின்றனர். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எனக்கு நிம்மதியான உறக்கம் தேவை எனச் சொல்வோரும் உண்டு. உலகப் போக்கில் வாழ்வோர் சில காலம் கழித்து தனிமையான ஆசிரமங்களைத் தேடியே செல்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. நாம் அனைவரும் வாழ்வில் தேடுவது மகிழ்ச்சி, நிம்மதி.

கத்தோலிக்கத் திருஅவை இஞ்ஞாயிறை மகிழ்ச்சி ஞாயிறு எனச் சிறப்பித்தது. இஞ்ஞாயிறு தனது மூவேளை செப உரையில், மகிழ்ச்சி பற்றியே விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். "மனித இதயம் மகிழ்வை விரும்புகின்றது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மனிதரும் மகிழ்வையே ஆர்வமுடன் தேடுகின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் எத்தகைய மகிழ்வை வாழ்ந்து அதற்குச் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டுள்ளனர்? கடவுளை நமக்கு நெருக்கமாக உணர்ந்து, கடவுளின் பிரசன்னத்தை நம் வாழ்வில் உணர்வதிலிருந்து கிடைக்கும் மகிழ்வுக்கு நாம் சாட்சி சொல்ல வேண்டும். இயேசுவே நமது மகிழ்வு, இயேசுவே நம் அமைதி. அவர் நம் மத்தியில் வாழ்கிறார், அவர் நம் மத்தியில் பணி செய்கிறார்" என்று கூறினார் திருத்தந்தை. மேலும், "எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள். எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்" என்று புனித புவுல் அடிகளார் கூறியிருப்பதையும் திருத்தந்தை தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.

அன்பு நெஞ்சங்களே, நாம் தேடும் மகிழ்வும், நிம்மதியும் பணத்திலும், மதுபானங்களிலும், திரையரங்குகளிலும் கிடைக்காது. அப்படி கிடைக்கும் மகிழ்வு அந்த கணப்பொழுதுக்கு மட்டுமே. பின்னர் மறைந்துவிடும். ஆனால் எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகவும், ஆதாரமாகவும் அமைந்து எங்கும் நீக்கமற நிறைந்து, எல்லாவற்றையும் கடந்தவராக இருக்கும் கடவுளில்தான் மாறாத, குறையாத அமைதி கிட்டும்.

ஒருமுறை சுவாமி விவேகானந்தர், ஆல்வார் அரசரைச் சந்தித்தார். அப்போது அரசர், சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை, மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டையையும் ஏன் வணங்க வேண்டும் என்று ஏளனக் குரலில் கேட்டார். விவேகானந்தர் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தை எடுத்துவரும்படி, தனது அருகில் நின்றுகொண்டிருந்த திவானிடம் சொன்னார் விவேகானந்தர். இது யாருடைய படம் என்று கேட்டார் விவேகானந்தர். அரசரின் படம் என திவான் பதில் சொன்னதும், சரி, அப்படத்தின்மேல் எச்சில் துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அரசரும் திவானும் அதிர்ந்து நின்றனர். இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே, எலும்பும் சதையும் இரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின்மீது ஏன் எச்சில் துப்புவதற்குத் தயங்குகிறீர்கள், ஏனெனில் இந்தப் படத்தில் அரசரைத் தரிசிக்கிறீர்கள் என்று சொன்னார். மேலும், சுவாமி விவேகானந்தர் அவர்களிடம், இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள். இதேபோல் மக்களும் அப்படித்தான் எல்லா வடிவங்களிலும் இறைவனைக் கண்டு வழிபடுகின்றனர் என விளக்கினார்.

காக்கைச் சிறகினில் இறைவனின் கரிய நிறத்தையும், பார்க்கும் மரங்களெல்லாம் அவரின் பச்சை நிறத்தையும், கேட்கும் ஒலியில் எல்லாம் அவரின் கீதம் இசைக்கப்படுவதையும், தீக்குள் விரலை வைத்தால் இறைவனைத் தீண்டும் இன்பத்தையும் உணர்ந்தவர் மகாகவி பாரதியார். எங்கும் எதிலும் இறைவனைக் கண்ட இந்த யோகி சொன்னார் - பக்தி செய்து பிழைக்கச் சொன்னான், பயன் கருதாமல் உழைக்கச் சொன்னான் என்று. ஒருமுறை ஸ்ரீ இராமனுஜர் அவர்களிடம், கடவுளை அடையும் வழி என்ன என்று ஒருவர் கேட்டார். அதற்கு இராமனுஜர், மனிதர்கள்மீது அன்பு வைப்பதுதான் அவ்வழி என்று சொன்னார். உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் இருக்கிறார் என்று சொன்னார் மகாத்மா காந்தி.

அன்பு நேயர்களே, நாம் நம் துன்ப சோதனை நேரங்களில் சுமை தாங்கிகளைத் தேடுகிறோம். மன வேதனைகளை இறக்கி வைக்க வடிகால்களைத் தேடுகிறோம். ஆனால் சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரங்கள் நமக்கு உண்டு. நம்பிக்கையோடு அவற்றை இறக்கி வைப்பதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். அவர்தான் இறைவன். அவர் உறையும் ஆலயங்கள் மனதுக்கு ஆறுதல் தரும் புனித இடங்கள். நம் மனப் பாரங்களை இறைவன் என்ற சுமைதாங்கிமீது இறக்கி வைத்தால் நம் மனத்தில் சுமை குறையும், சுமை குறைந்தால் மனம் இலகுவாகும். மனம் பாரமின்றி இருந்தால் வாழ்வில் இனிமை பெருகும். அப்போது எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். உடன் வாழ்வோர், உடன்பிறப்புக்களாகத் தோன்றுவர். அவர்கள்மீது நம் அன்பும் அதிகரிக்கும்.

ஆம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதே உண்மையான ஆண்டவன் வழிபாடு. இதுவே உண்மையான பக்தி. ஒருவர் உண்மையிலேயே இறைவனைத் தொழுகின்றார், அவரிடம் அன்பு வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று. நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் தூய்மையான மனத்துடன் செய்ய வேண்டும். தூய்மையான இறைவன் எல்லாவற்றிலும் தூயதையே பார்க்கிறார். பிறரின் பாராட்டுக்காக அன்புச் செயல்களைச் செய்யலாம். அவை மற்றவர் பார்வைக்கு நற்செயல்களாகவும் தெரியலாம். ஆனால் இறைவனால் அது ஏற்கப்படாது. மனதில் தூய எண்ணமில்லாத எச்செயலுக்கும் பலனே கிடைக்காது. கீதையில் இப்படியொரு போதனை உள்ளது. நீ எனக்கு ஓர் இலையோ, பூவோ, பழமோ கொடு. இவை எதுவுமில்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு. ஆனால் எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. ஏனெனில் தூய மனம் உள்ளவன் எதைக்கொடுத்தாலும் ஏற்பேன். அன்பர்களே, வாழ்க்கை இனியதாக அமைய மகிழ்ச்சி தேவை. மகிழ்ச்சி வாழ்வு வேண்டுமானால், தீமைக்குப் பதில் தீமை செய்ய வேண்டாம், எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்ய முயற்சியுங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள். இவ்வுலகின் மலிவான விற்பனைகளில் மகிழ்ச்சி உண்டு என மயங்கி அவற்றில் மனதைப் பறிகொடுக்காதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.