2014-12-11 16:13:22

இவ்வாண்டு கிறிஸ்மஸை, 'கறுப்புக் கிறிஸ்மஸ்' என்று கொண்டாட, மும்பை அமைப்பு ஒன்று அழைப்பு


டிச.11,2014. இந்து அடிப்படைவாதக் குழுக்களால் ஆபத்து கூடிவரும் இந்தியாவில், அணுகிவரும் கிறிஸ்மஸ் நாட்களை, 'கறுப்புக் கிறிஸ்மஸ்' என்று கொண்டாட, மும்பையில் இயங்கிவரும் கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வருகிற கிறிஸ்மஸ் நாளன்று, சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த 5,000 கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக மத மாற்றம் செய்யப்போவதாக RSS அமைப்பினர் விடுத்துள்ள ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி உருவானபிறகு, RSS அமைப்பினரும், ஏனைய இந்து அடிப்படைவாதக் குழுக்களும் நாட்டில் மத வேற்றுமை உணர்வுகளைத் தூண்டி வருகின்றனர் என்று கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பினரின் செயலர், ஜோசப் டயஸ் அவர்கள் கூறினார்.
மக்கள் தங்கள் சுயவிருப்பத்தில் மதம் மாறுவது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறும் ஜோசப் டயஸ் அவர்கள், மறைமுகமான பல்வேறு கட்டாயங்களால் மக்களை மதம் மாற்றிவரும் RSS அமைப்பினரின் திட்டங்கள், மத சார்பற்ற இந்திய சமுதாயத்தின் அடிப்படை கொள்கையை கேலியாக்குகின்றன என்று கூறினார்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.