அமெரிக்க சி.ஐ.ஏ விசாரணை முறைகள் மனித மாண்பை முற்றிலும் அழித்துள்ளன
டிச.11,2014. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ (CIA) மேற்கொண்ட கொடுமையான விசாரணை
முறைகள் இறைவன் வழங்கியுள்ள மனித மாண்பை முற்றிலும் அழித்துள்ளன என்று அமெரிக்க ஆயர்
ஒருவர் கூறியுள்ளார். சிஐஏ (CIA) மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகள், கொடுமையானது
என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, (Senate panel on
CIA interrogation practices) இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. CIA அமைப்பின் விசாரணைகளில்
நிகழ்ந்துள்ள அநியாயங்களைக் குறித்து, இச்செவ்வாயன்று வெளியான 500 பக்க சுருக்கத்தைக்
குறித்து தன் கருத்தை வெளியிட்ட, அமெரிக்க ஆயர் பேரவையின், பொறுப்பாளர்களில் ஒருவரான
ஆயர் Oscar Cantu அவர்கள், சித்ரவதை என்பது, தன்னிலேயே மிகவும் தீமையானது, அதனை எந்த
ஒரு காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்பதை கத்தோலிக்கத் திருஅவை உறுதியாக நம்புகிறது
என்று கூறினார். சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் CIA அமைப்பினரால்
நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின்
தலைவர் டையான் பெயின்ஸ்டைன் (Dianne Feinstein) அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்
வர்த்தகக் கோபுரங்கள் மீது 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்குப்
பிறகு அமல்படுத்தப்பட்ட இந்த விசாரணை முறைகளின் விளைவாக, ஒரு முறை கூட, தீவிரவாதிகளைக்
குறித்த உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. தீவிரவாதம்
என்ற சந்தேகத்தில் கைதானவர்கள், சிஐஏ விசாரணை முறைகளின்படி, 180 மணிநேரம் தொடர்ந்து விழித்திருக்கும்படி
நிர்ப்பந்திக்கப்பட்டனர்; கைதிகள் அவமானப்படுத்தப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; என்று இவ்வறிக்கை,
சிஐஏ மேற்கொண்ட கொடுமைகளை பட்டியலிட்டுள்ளது. சிஐஏ தனது திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை
என்றும் இது தொடர்பாக மக்களுக்கு அது தவறான விவரங்களைத் தந்ததாகவும் செனட் உறுப்பினர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.