வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவையின் ஆரம்ப ஏடு வெளியீடு
டிச.10,2014. 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், 4ம் தேதி முதல், 25ம் தேதி முடிய வத்திக்கானில்
நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவையின் ஆரம்ப ஏடு ஒன்றை, ஆயர்கள் மாமன்றச் செயலகம், இச்செவ்வாயன்று
வெளியிட்டுள்ளது. குடும்பத்தை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவைக்குத்
தேவையான ஏற்பாடுகளைத் துவக்கிவைக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏடு, உலகின் அனைத்து
கத்தோலிக்க ஆயர்கள் பேரவைகள், ஏனைய வழிபாட்டு முறைத் திருஅவைகள், துறவுச் சபைகள் மற்றும்
திருப்பீடத்தின் அனைத்து அவைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு வத்திக்கானில்
நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் எழுந்த கருத்துக்களின் அடிப்படையில், 46 கேள்விகள்
அடங்கிய இந்த ஏடு, அனைத்துலக கத்தோலிக்கத் திருஅவையின் மறைமாவட்டங்கள், துறவுச் சபைகள்
என்ற பலநிலைகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த
விவாதங்களின் அறிக்கை, 2015ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் வத்திக்கானை வந்தடைய
வேண்டும் என்ற குறிப்புடன் இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 28ம்
தேதி கொண்டாடப்படும் திருக்குடும்பத் திருவிழாவன்று, அகில உலக கத்தோலிக்கத் திருஅவை,
நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவைக்கென சிறப்பு செபங்களை எழுப்புமாறு, இந்த ஏடு விண்ணப்பித்துள்ளது.