கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று
நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணை
டிச.10,2014. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும்
வழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணையை, திருப்பீடத்தின் வழிபாட்டுத் துறைத் தலைவர், பேரருள்திரு
Guido Marini அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார். டிசம்பர் 24 இரவு, 9.30 மணிக்கு,
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், அடுத்தநாள் நண்பகல் 12 மணிக்கு பசிலிக்காப் பேராலய மேல்மாடியிலிருந்து, வளாகத்தில்
கூடியிருப்போருக்கு முன், “Urbi et Orbi” அதாவது, 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற சிறப்புச்
செய்தியை வழங்குவார். டிசம்பர் 31, புதன் மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப்
பேராலயத்தில், திருத்தந்தையின் தலைமையில், 'Te Deum' என்ற நன்றிப் பண்ணுடன் கூடிய மாலைச்
செபமும், நற்கருணை ஆசீரும் நடைபெறும். ஆண்டின் முதல் நாள் கொண்டாடப்படும் இறைவனின்
அன்னையாகிய மரியாவின் பெருவிழா மற்றும், 48வது உலக அமைதி நாளன்று, காலை 10 மணிக்கு, புனித
பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆடம்பரத் திருப்பலியை,
தலைமையேற்று நடத்துவார். கிறிஸ்மஸ் காலத்தின் இறுதி நிகழ்ச்சியாக, சனவரி 6, செவ்வாயன்று,
காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியை,
திருத்தந்தை நிகழ்த்துவார்.