2014-12-09 15:49:14

மரியே, இவ்வுலகப் போக்கிற்கு எதிராகச் செல்வதற்கு கற்றுத்தாரும்


டிச.09,2014. மனித சமுதாயத்தை அனைத்து ஆன்மீக மற்றும் பொருளிய அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்குமாறு அன்னை மரியாவிடம் இத்திங்கள் மாலையில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை மரியாவின் அமல உற்பவ விழாவான இத்திங்கள் மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாகச் செபித்து நோயாளிகளை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.
அதன்பின்னர் உரோம் இஸ்பானிய வளாகம் சென்று அங்கிருக்கும் அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக நின்று உலகின் குடும்பங்களையும், உரோம் நகரையும், உலகையும் பாதுகாக்குமாறு செபித்தார் திருத்தந்தை.
மனிதர் அனைவரின் இதயங்களிலும், அனைத்து நிகழ்வுகளிலும் கடவுளின் மீட்புத்திட்டம் நிறைவேறவும், இறைவனின் அழகு தங்களை ஆக்ரமிக்கவும், இறைவன் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக்கொள்ளவும் மனிதர் அனைவருக்கும் வரம் அருளுமாறும் மன்றாடினார் திருத்தந்தை.
மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள உரோம் அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 21 மாத பாப்பிறைப் பணிக்காலத்தில் குறைந்தது 16 தடவைகள் இப்பசிலிக்கா சென்று உரோம் அன்னை மரியாவிடம் செபித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.