2014-12-09 15:49:30

மனித வர்த்தகத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, பிலிப்பைன்ஸ் ஆயர்கள்


டிச.09,2014. நவீன அடிமைமுறையான மனித வர்த்தகத்துக்கு எதிராகச் செயல்படுவதற்குத் தவறினால் அது திருஅவையின் மதிப்பைக் குறைக்கும் என்று பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித வர்த்தகம் குறித்துப் பேசிய பிலிப்பைன்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வில்லேகாஸ் அவர்கள், மனித வர்த்தகத்துக்கு ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் பலிகடா ஆவது, கிறிஸ்தவ நாடான பிலிப்பைன்ஸ்க்கு பலர் பலிகடா ஆவதாகும் என்று கூறினார்.
மனித வர்த்தகத்தின் தீமை அதிகமாகப் பரவி வருகின்றது, இதனைத் தடுத்து நிறுத்தவதற்கு அரசுக்கும் திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பேராயர் வில்லேகாஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட மேய்ப்புப்பணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
உலக அடிமைமுறை குறியீட்டின் 2014ம் ஆண்டு பதிப்பில், பிலிப்பைன்ஸ் நாடு 26வது இடத்திலும், ஆசிய-பசிபிக் பகுதியில் அந்நாடு முதல் இடத்திலும் உள்ளது. 167 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவாக இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.