டிச.09,2014. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான
புதிய அடையாளத்தை கண்டுபிடித்துள்ளதாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அறிவியலாளர்கள்
தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இப்போது மலைகளாக காட்சி தருபவை
ஒரு காலத்தில் ஏரிகளாகவும், ஆறுகளாகவும் இருந்திருக்கக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நேரத்தில்
ஆறுகளாகவும், நீர் நிலைகளாகவும் இருந்த இடம் பின்னர் ஆவியாகி பல இலட்சணக்கணக்கான ஆண்டுகளாக
அவை பாறை படிவங்களாக உருமாறி தற்போது மலைபோல காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக,
அங்கு காணப்படும் மவுண்ட் ஷார்ப் மலை பல ஆயிரம் ஆண்டுகளாக தேங்கியுள்ள படிவங்களையே காட்டுவதாக
அமைந்துள்ளது. அப்படியானால், நீர் நிலைகள் மீண்டும் படிவங்களாக மாறுவதற்கு பருவநிலை எப்படி
ஒத்துழைத்தது என்பது அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்கு அடுத்த சவாலான கேள்வியாக உள்ளது.
எனினும், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல்கள் இருந்திருக்கக்கூடும் என அறிவியலாளர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.