2014-12-05 16:32:15

பிலிப்பின்ஸ் நாட்டுக்காகச் செபிக்குமாறு தலத்திருஅவை வேண்டுகோள்


டிச.05,2014. ஹகுபிட் (Hagupit) புயல் பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும்வேளை, அந்நாட்டுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
பிலிப்பின்ஸ் நாட்டின் கிழக்குக் கரையில் இப்புயலின் தாக்கம் ஏற்கெனவே தெரிகின்றவேளை, மண்சரிவால் எளிதில் பாதிக்கப்படும் கடற்கரை கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். துறைமுகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், அரசு நிறுவனங்களும், பிற அரசு அதிகாரிகளும் அறிவிக்கும் ஆலோசனைகளின்படி மக்கள் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசு துரிதமாகச் செயல்படுமாறு, பிலிப்பின்ஸின் ஏனைய ஆயர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய பகுதியை, 2013ம் ஆண்டு நவம்பரில் தாக்கிய ஹையான் கடும் புயலில் 7,000 பேருக்கு மேல் இறந்தனர் மற்றும் காணாமல் போயினர்.
மேலும், இப்போது அச்சுறுத்திவரும் ஹகுபிட் புயல் வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று பிலிப்பின்ஸ் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.