திருத்தந்தை : மனித வர்த்தகத்தால் தங்களின் மாண்பை இழந்து துன்புறுவோரை ஒருபோதும் மறக்கக்
கூடாது
டிச.05,2014. இலண்டனில் நடைபெற்றுவரும் மனித வர்த்தகம் குறித்த இரண்டாவது கருத்தரங்குக்குச்
செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வர்த்தகத்தால் தங்களின் மனித
மாண்பை இழக்கும் எண்ணற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரின் துன்பங்களை நாம் ஒருபோதும்
மறக்கக் கூடாது மற்றும் புறக்கணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தரங்கை
நடத்தும் பிரித்தானிய அரசு, இலண்டன் காவல்துறை, பிரித்தானிய ஆயர் பேரவை ஆகியோருக்கு நன்றி
தெரிவித்துள்ள திருத்தந்தை, மனித வர்த்தகத்துக்கு எதிராகத் திருஅவை தொடர்ந்து செயல்படும்
மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் என்ற உறுதியையும் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு
ஏப்ரலில் வத்திக்கானில் நடைபெற்ற, மனித வர்த்தகம் குறித்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக
இது நடைபெறுவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டு, மனித வர்த்தகம் என்ற குற்றத்திற்கு
அடிமையாகி இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளையும் ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இந்தத் தனது செய்தியை வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் கர்தினால் நிக்கோல்ஸ்
அவர்களுக்கு அனுப்பி, இச்செய்தியை அக்கருத்தரங்குக்கு வழங்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.