திருத்தந்தை : நம்பிக்கையை வழங்கும் காலம் திருவருகைக் காலம்
டிச.04,2014. 'நமக்கு ஏமாற்றத்தை வழங்காத, நம்பிக்கையை அதிகரிக்கும் காலமாக திருவருகைக்காலம்
உள்ளது. நம் இறைவன் நம்மை ஒரு நாளும் கைவிடுவதில்லை' என்ற நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை
இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இதே
வியாழனன்று, மொசாம்பிக் நாட்டின் அரசுத்தலைவர் Arnando Emilio Gebuza அவர்களை, திருப்பீடத்தில்
சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின்,
அரசுத்தலைவர் Emilio Gebuza அவர்கள், திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்
அவர்களையும், வெளியுறவுகளுக்கான திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் அருள்பணி Antoine
Camilleri அவர்களையும் சந்தித்து உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுகள்
பற்றியும் கல்வி, நலவாழ்வு மற்றும் அமைதியையும் இணக்கவாழ்வையும் ஊக்குவிப்பதில் திருஅவையின்
பங்களிப்பு குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. மேலும், இம்மாதம் 12ம் தேதி
சிறப்பிக்கப்படும் மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற குவாதாலூப்பே மரியன்னை விழாவையொட்டி,
அதே நாளில் உரோம் நகர் தூய பேதுரு பேராலயத்தில் திருப்பயணிகளுக்கான திருப்பலியை உரோம்
நேரம் மாலை 6 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.