புதுடில்லியில் புனித செபஸ்தியார் ஆலயம் எரிக்கப்பட்டதை விசாரணை செய்ய சிறப்புக் குழு
நியமனம்
டிச.03,2014. புதுடில்லியில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டதை விசாரணை செய்ய
ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படுள்ளதாக புதுடில்லி காவல் துறை அறிவித்துள்ளது. இத்திங்களன்று
புதுடில்லியின் ஒரு பகுதியில் அமைந்த புனித செபஸ்தியார் ஆலயம் தீக்கிரையானதற்குக் கண்டனம்
தெரிவித்தும், அதை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமனம் செய்யக் கோரியும் இச்செவ்வாயன்று
புதுடில்லியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. டில்லி பேராயர், அனில் கூட்டோ
அவர்கள் தலைமையில், தலத்திருஅவைத் தலைவர்கள், ஏனையக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற
இந்தப் போராட்டத்தின் இறுதியில், பிரதமருக்கு வழங்கப்பட்ட மனுவில், கிறிஸ்தவர்களுக்கு
எதிராக, பொது மேடைகளில் பேசப்படும் வெறுப்பு மொழிகளை நிறுத்தவும் அரசு, உறுதியான நடவடிக்கைகள்
மேற்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, டில்லி
காவல்துறை உயர்மட்ட அதிகாரி, Deepak Mishra அவர்கள், ஆலயத் தீவிபத்து குறித்து விசாரிக்க,
தனிப்பட்ட ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், டில்லி மாநகரில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவக்
கோவில்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தாக UCAN செய்திக்குறிப்பொன்று
கூறுகிறது.