2014-12-03 16:12:36

கிறிஸ்தவக் குடும்பங்கள் புனித பூமியில் தங்குவதற்கு, அனைத்துலக மறைமாவட்டங்களின் உதவி தேவை - முதுபெரும் தந்தை Fouad Twal


டிச.03,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களிலேயே தங்கிவாழ உதவி செய்யவேண்டும் என்று, எருசலேமில் பணியாற்றிவரும், இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் வத்திக்கானில், குடும்பங்களை மையப்படுத்தி நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்துகொண்டு, எருசலேம் திரும்பிய முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், கிறிஸ்தவக் குடும்பங்கள் எருசலேமிலும், புனித பூமியிலும் தங்குவதற்கு, மறைமாவட்டங்களின் பொருளுதவி தேவை என்று விண்ணப்பித்துள்ளார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதும், பெத்லகேம், எருசலேம் ஆகிய நகரங்களில் இஸ்லாமியர்கள் வீடுகளை வாங்குவதும் தற்போதைய நிலை என்று முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மறைமாவட்டமும் நிதி உதவிகள் செய்தால் மட்டுமே கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் வீடுகளை வாங்கி, தொடர்ந்து அப்பகுதியில் வாழ முடியும் என்று, முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித பூமியில் கிறிஸ்தவ வேர்களைக் காப்பதில், உலகின் அனைத்து மறைமாவட்டங்களும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.