கென்யா, தேசியப் பேரிடர் நிலையில் உள்ளது, தலத்திருஅவை
டிச.02,2014. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவின் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாகச்
சொல்லி, அந்நாடு "தேசியப் பேரிடர்" நிலையில் உள்ளது என அறிக்கையிட வேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளார்
அந்நாட்டு ஆயர் ஒருவர். கென்யாவின் வடக்கே, Mandera நகருக்கு அருகிலுள்ள கல்குவாரியில்
வேலைசெய்த தொழிலாளர்களில் 28 பேர், கடந்த நவம்பர் 22ம் தேதியன்று, சொமாலிய அல்-ஷாபாப்
அமைப்பின் தீவிரவாதிகளால் கொடூரமாய்க் கொல்லப்பட்டதையடுத்து இவ்வாறு அரசைக் கேட்டுள்ளார்
கென்ய ஆயர் பேரவாயின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth. 'கென்யா,
துக்கத்தில் உள்ளது... உடனடியாகச் செயல்படு' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டின்
Kisumu பேராயர் Okoth அவர்கள், கென்யாவில் சொமாலியத் தீவிரவாதிகள் நுழையாதவாறு, எல்லைப்புறத்தில்
சிறப்பு இராணுவத்தினரை அமர்த்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளார். சொமாலியா நாட்டின்
எல்லைப்புறத்திலுள்ள Mandera நகரின் கல்குவாரியில் வேலை செய்த தொழிலாளர்களில் முஸ்லிம்
அல்லாதவர்களைப் பிரித்துக் கொலைசெய்துள்ளனர் தீவிரவாதிகள். கொலைசெய்யப்பட்டவர்கள் குரான்
புனித நூலின் வசனத்தைச் சொல்ல இயலாதவர்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மேலும், இவ்வன்முறையை
எதிர்த்து கென்யாவில் போராட்டங்களும் இடம்பெற்றன.