உலகில் தடைசெய்யப்பட்ட வெடிகளுக்குப் பலியாவோரில் பாதிப்பேர் சிறார்
டிச.02,2014. நிலக்கண்ணி வெடிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வெடிகளுக்குப் பலியாவோரில் பாதிப்பேர்
சிறார் என்று, கொலம்பிய அரசு-சாரா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. "நிலக்கண்ணி வெடிகள்
தடைசெய்யப்பட வேண்டும்" என்ற போராட்டத்தை ஆண்டுதோறும் நடத்திவரும், இலத்தீன் அமெரிக்க
நாடான கொலம்பியாவின் CCCM என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகில் தடைசெய்யப்பட்ட
வெடிகளால், 2013ம் ஆண்டில் இறந்தவர்களில் பாதிப்பேர் சிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையை
அதிகமாகக் கொண்டுள்ள பகுதியாக கொலம்பியா, ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த நிலையில் உள்ளது என்று
கூறும் அவ்வறிக்கை, ஆப்கானிஸ்தான், கொலம்பியா, சிரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளில்
இவ்வெண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் கூறியது. மேலும், சிரியாவில் 2011ம் ஆண்டுமுதல்
இடம்பெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால், ஐம்பது இலட்சம் சிறாருக்கு உடனடி மனிதாபிமான
உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், இச்சண்டை, தலைமுறைகளின் அழிவுக்குக் காரணமாகின்றது
என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.