டிச.01,2014. துருக்கியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்காக
அந்நாட்டு மக்கள் அனைவர் சார்பிலும் நன்றித் தெரிவிப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது,
துருக்கி தலத்திருஅவை. துருக்கி தலத்திருஅவை அதிகாரிகள் இணைந்து இத்திங்கள் காலை வெளியிட்டுள்ள
செய்தியில், சிறுபான்மையினராக இருக்கும் துருக்கி கத்தோலிக்கர்கள் தாங்கள் எதிர்நோக்கும்
பெரும் சவால்கள் மத்தியிலும், உரையாடலின் கருவிகளாக செயலாற்ற முடியும் என தன் செயல்கள்
மூலம் காட்டிச் சென்றுள்ள திருத்தந்தைக்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. அடிப்படை
மனித உரிமைகளையும் மனித மாண்பையும் மதிப்பதன் வழியாகவே உண்மையான அமைதியை கட்டியெழுப்பமுடியும்
என்பதை எடுத்துரைத்த திருத்தந்தைக்கு நன்றிகூறும் அதேவேளை, மதங்களிடையே, கலாச்சாரங்களிடையே
கலந்துரையாடலை ஊக்குவிக்கும் அவரின் ஆவலை தொடர்ந்துச் செயல்படுத்த உள்ளதாகவும் தங்கள்
செய்தியில் உறுதி கூறியுள்ளது, துருக்கி ஆயர் பேரவை.