2014-11-30 14:52:38

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை


நவ.30,2014. புனிதமிக்க என் அன்பு சகோதரரே,
ஒவ்வொரு நாள் மாலையிலும், நன்றியும், நம்பிக்கையும் கலந்த உணர்வுகள் உள்ளத்தை நிறைக்கின்றன. என் திருத்தூது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த மாலை நேரத்தில், புனிதமிக்க உங்களுடன் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையை நிறுவியவரும், பாதுகாவலருமான புனித அந்திரேயாவின் திருநாளை நாம் நாளை எதிர்நோக்கியிருக்கிறோம்.
நாம் மகிழ்வோடும், நம்பிக்கையோடும் இணைந்து முன்னேறிச் செல்வதற்கு, இறைவாக்கினர் செக்கரியாவின் வார்த்தைகள் உந்துதலாக உள்ளன. "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன். உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்." (செக்கரியா 8: 7,8)
ஆம், என் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களே, உங்களுக்கு நான் நன்றி சொல்லும்போது, பெருமகிழ்வு கொள்கிறேன். இந்த மகிழ்வு, நம்மிடமிருந்தோ, நமது முயற்சிகளிலிருந்தோ வருவதல்ல; மாறாக, இறைவனின் வாக்குப் பிறழாமை நமது மகிழ்வுக்குக் காரணமாக உள்ளது. இந்த மகிழ்வை இவ்வுலகம் தரமுடியாது, ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதி, மகிழ்வு என்ற இக்கொடையை உறுதி செய்துள்ளது.
அந்திரேயாவும் பேதுருவும் இந்த வாக்குறுதியைக் கேட்டனர்; இக்கொடையைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் இரத்த உறவினால் உடன்பிறப்புக்கள் என்றாலும், கிறிஸ்து அவர்களுடன் கொண்ட சந்திப்பிற்குப் பின், நம்பிக்கையிலும், பிறரன்பிலும் அவர்கள் உடன்பிறந்தோராயினர். உயிர்த்த ஆண்டவரின் நம்பிக்கையில் உடன்பிறப்பாக மாறுவது எத்தனை உயர்ந்த வரம்!
மகிழ்வு நிறைந்த இந்த நம்பிக்கையில், புனிதமிக்க உங்களுக்கும், Constantinople திருஅவையைச் சார்ந்த அனைவருக்கும், உங்கள் பாதுகாவலரான புனித அந்திரேயா அவர்களின் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். உங்களிடம் நான் ஓர் உதவியை வேண்டுகிறேன்: என்னையும், உரோம் திருஅவையையும் ஆசீர்வதியுங்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.