இஸ்தான்புல் நகரில், தூய ஆவியார் பேராலயத்தில் திருத்தந்தை வழங்கிய
மறையுரை
நவ.29,2014. மீட்பின் தாகம் கொண்டுள்ள அனைவருக்கும், தாகம் தீர்க்கும் ஊற்றாக, இயேசு
தன்னையே வெளிப்படுத்துகிறார் (யோவான் நற்செய்தி 7,38). எருசலேமில் இத்தகைய இறைவாக்குரைத்த
இயேசு, தன் சீடர்கள் பெறவிருக்கும் தூய ஆவியாரின் கொடைகளை இவ்விதம் முன்னறிவிக்கிறார்.
தூய ஆவியார், திரு அவையின் ஆன்மாவாக விளங்குகிறார். வாழ்வு வழங்கும் அவர், ஒவ்வொருவருக்கும்
தனி வரங்களைத் தந்து, அவர்களை ஒருங்கிணைக்கும் ஊற்றாகவும் விளங்குகிறார். திருஅவையின்
வாழ்வும், பணியும் தூய ஆவியாரைச் சார்ந்தே உள்ளன. புனித பவுல் அடியார் கூறுவதுபோல்,
தூய ஆவியாரின் தூண்டுதலால்தான், நமது நம்பிக்கையை அறிக்கையிட முடியும் (1 கொரிந்தியர்
12,3). நாம் செபிக்கும்போது நமக்குள்ளிருந்து வழிநடத்துவது, தூய ஆவியாரே! தன்னலத்தைக்
கடந்து, அடுத்தவருக்குப் பணியாற்ற நம்மைத் தூண்டுவதும் தூய ஆவியாரே! தூய ஆவியார்,
திருஅவைக்கு வழங்கியுள்ள பல்வேறு கொடைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை குழப்பத்தை
உருவாக்குவதுபோல் தெரியலாம். ஆனால், இத்தகைய வேற்றுமைகளின் வழியே, ஒற்றுமையை உருவாக்குவது,
தூய ஆவியாரின் பணி. திருஅவையும், ஏனையச் சபைகளும், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்குக்
கீழ்படிந்து நடக்க அழைக்கப்பட்டுள்ளன. தூய ஆவியாரின் வழிநடத்துதல், சுகமான நிலைகளிலிருந்து
நம்மை வெளியேற்றுவதால், அவருக்குக் கீழ்படிவது எளிதானதல்ல. நமது சுக நிலைகளிலேயே தங்கி,
அவற்றைக் காப்பதிலேயே குறியாய் இருப்பது எளிது. ஆனால், இவற்றைவிட்டு வெளியேறி, தூய ஆவியாரால்
வழிநடத்தப் படும்போதுதான் நாம் மறைபரப்புப் பணியாளர்களாக மாறுகிறோம். சுகமான, பாதுகாப்பான
நிலைகளில் தங்கிவிடும்போது, அடுத்தவரின் கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் ஏற்க மறுக்கிறோம்.
தூய ஆவியாரின் வருகையால் வாழ்வு பெற்றுள்ளத் திருஅவை, எண்ணங்களாலும், வலிமையாலும் நிரப்பப்படுவதில்லை;
மாறாக, அடுத்தவருக்குப் பணியாற்றும் அன்பினால் நிரப்பப்படுகிறது. தூய ஆவியார் வழங்கும்
இந்த மகிழ்வான உறுதியுடன், இங்கு கூடியிருக்கும் சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை,
இப்பகுதியின் திருத்தூதுப் பிரதிநிதி, ஏனைய ஆயர்கள், அருள் பணியாளர், தியாக்கோன்கள்,
துறவியர், பொதுநிலையினர், ஏனைய மத நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரையும் நான் அரவணைக்கிறேன். தூய
ஆவியாரின் வருகைக்குக் காத்திருந்த சீடர்களுடன் மேலறையில் செபத்தில் இணைந்த அன்னை மரியாவை
அணுகிவருவோம். இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுகளாக நாம் வாழ, இறைவன், தன் தூய ஆவியாரை
நம்மிடையே அனுப்புமாறு மன்றாடுவோம்.