திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணத்தை அனைத்து வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களும்
ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்
நவ.27,2014. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், கல்தேய,
ஆர்மீனிய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்கள் என்று அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்,
துருக்கி நாட்டு வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று, இஸ்தான்புல்
திருத்தூது நிர்வாகியான ஆயர் Louis Pelâtre அவர்கள் கூறினார். இவ்வெள்ளி முதல், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூது பயணம் குறித்து,
ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் Pelâtre அவர்கள், துருக்கி நாட்டு கிறிஸ்தவ சமுதாயம்
கடந்த 20 ஆண்டுகளில் அடைந்துவரும் மாற்றங்கள் குறித்துப் பேசினார். 7 கோடியே, 60 இலட்சம்
மக்கள் தொகை கொண்ட துருக்கி நாட்டில், 1,20,000 என்ற அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்
கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று கூறிய ஆயர் Pelâtre அவர்கள், அண்மையக் காலங்களில் பிலிப்பின்ஸ்,
ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து வந்து குடியேறியுள்ள கத்தோலிக்கர்களால் திருஅவை புத்துணர்வு
பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். துருக்கி நாட்டில் திருத்தூது பிரதிநிதியாகப் பணியாற்றி,
பின்னர் திருஅவையின் தலைவரான திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் எழுதியுள்ள 'ஓர் ஆன்மாவின்
நினைவுகள்' (Journal of a Soul) என்ற சுயவரலாற்றில் குறிப்பிடும் பொறுமை என்ற பண்பு துருக்கி
நாட்டின் திருஅவை வளர்ச்சியில் கடைப்பிடிக்கப்படவேண்டிய முக்கியப் பண்பு என்று ஆயர் Pelâtre
அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.