2014-11-27 15:52:21

திருத்தந்தை : ஊழலிலும் கேளிக்கைகளிலும் மூழ்கிப்போன வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது


நவ.27,2014. இன்றைய உலகில் நாம் காணும் துன்பம், ஊழல், அக்கறையற்ற நிலை போன்ற அவலம் நிறைந்த எதார்த்தங்களின் மத்தியிலும், நம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பாபிலோனிய, எருசலேம் நகரங்களின் அழிவு பற்றி நவம்பர் 27, இவ்வியாழன் திருப்பலி வாசகங்களில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருத்தந்தை அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
ஊழல் என்ற அவலத்தில் ஊறிப்போன பாபிலோன், அந்தத் தீமையிலிருந்து தன்னை விடுவிக்க இயலாமல் அழிந்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழல் என்ற வார்த்தையை பொருளாதாரத்தோடு மட்டும் இணைக்காமல், வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் ஊழல் புரையோடி போயிருப்பதை நாம் உணரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாபிலோனின் வீழ்ச்சிக்கு ஊழல் காரணமானதுபோல், எருசலேமின் வீழ்ச்சிக்கு, கேளிக்கைகள் காரணமானது என்று திருத்தந்தை தன் மறையுரையில் இரு நகரங்களையும் ஒப்புமைப்படுத்தினார்.
ஊழலில் ஊறிப்போய், கேளிக்கைகளில் மூழ்கிப்போய் கிடக்கும் நம் வாழ்வை மறுபரிசீலனைச் செய்யும் நேரம் இது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நம்மைச் சுற்றி நிகழும் அவலங்களால் மனம் சோர்ந்து நம்பிக்கையிழக்காமல், இந்த அவலங்கள் எல்லாம் ஒரு நாள் தீரும், நம் இறைவன் தரும் விருந்தில் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ்வோம் என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் வலியுறுத்தினார்.
மேலும், 'நம்பிக்கையின் அளவுகோல் அன்பே' என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.