2014-11-27 15:52:38

திருத்தந்தை : அடிபட்டிருக்கும் மனிதர்களைத் தேடிச் செல்வதற்கு மேய்ப்புப்பணியில் முன்னுரிமை தரவேண்டும்


நவ.27,2014. நகரங்களில் மேற்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி, வெறும் செயல்பாடுகளாக மட்டும் அமையாமல், நமது மனநிலை, நமது இருப்பு, நமது செய்கைகள் என்று பல அம்சங்கள் வழியே வெளியாகவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
'பெரு நகரங்களில் மேய்ப்புப்பணி' என்ற மையக்கருத்துடன், நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில், இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற 25 கர்தினால்கள், மற்றும் ஏனையப் பேராயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, Buenos Aires பெருநகரில் பணியாற்றிய வேளையில் தான் பெற்ற அனுபவங்களையும், தன் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
மேய்ப்புப்பணியில் நாம் கொள்ளவேண்டிய மனநிலை, பன்முகக் கலாச்சாரச் சூழலில் நாம் ஆற்றவேண்டிய உரையாடல், மக்களின் இறை உணர்வு, நகரங்களில் வாழும் வறியோர் என்ற நான்கு கருத்துக்களில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
அடிப்பட்டிருப்போரைச் சந்திக்கச் செல்லும் சமாரியரைப் போல, நாம், நகரங்களில் பல்வேறு வகையில் அடிபட்டிருக்கும் மனிதர்களைத் தேடிச் செல்வதில்தான் நமது மேய்ப்புப்பணி முதலுரிமை தரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான வேண்டுகோள் விடுத்தார்.
திருஅவையின் பிறரன்பு நிறுவனங்களுடனும், வறியோருக்கென பணிகள் ஆற்றிவரும் பல்வேறு அமைப்பினரோடும் கரம் கோர்த்து நாம் உழைக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.