2014-11-21 15:59:20

"அளவற்ற இறைவனின் அழகிற்கு ஓர் அடையாளம், மரியா" என்ற கருத்தரங்கு உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய செய்தி


நவ.21,2014. உலகமும், திருஅவையும் கடினமான பிரச்சனைகளைச் சந்தித்த வேளையில், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள், மரியன்னையின் துணையை, தான் மட்டும் தேடியதோடு, மக்களையும் அன்னை மரியாவிடம் வேண்டச் சொல்லித் தந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
"அளவற்ற இறைவனின் அழகிற்கு ஓர் அடையாளம், மரியா" என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு செய்தியை, இவ்வியாழன் மாலை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தார்.
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் மரியன்னைக்கு திருஅவை வழங்கும் வணக்கத்தைக் குறித்து வெளியிட்ட 'Marialis Cultus' என்ற ஏடு குறித்தும், இன்னும் ஏனையச் சூழல்களில் திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் மரியன்னையைக் குறித்து வெளியிட்ட பல்வேறு உரைகளைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பீடக் கல்விக் கழகமும், திருப்பீட மரியன்னைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் மரியன்னை மீது திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த உறவைக் குறித்து விளக்கவுரை அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.