பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டத்தால் சிறுபான்மை மதத்தவர் தொடர்ந்து பாதிப்பு
நவ.15,2014. பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் தெய்வநிந்தனைச் சட்டம் சிறுபான்மை மதத்தவரைத்
தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றது என்று சொல்லி, அது குறித்த புள்ளி விபரங்களை
வெளியிட்டுள்ளது அந்நாட்டில் பணியாற்றும் ஓர் அரசு-சாரா அமைப்பு. 1987ம் ஆண்டுக்கும்
2014ம் ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,438 பேர் தெய்வநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்
என்றும், தெய்வநிந்தனை குற்றம் சுமத்தப்படுபவரில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டினர்,
அந்நாட்டில் நான்கு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள சிறுபான்மை மதத்தவர் என்றும் Awaz-e-Haq
Itehad (AHI) என்ற அமைப்பு கூறியது. இக்குற்றத்தின்கீழ் 1990ம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டுள்ள
60 பேரில் 32 பேர் சிறுபான்மை மதத்தவர் மற்றும் 28 பேர் முஸ்லிம்கள். இவர்களில் 20 பேர்
காவல்துறையின் தடுப்புக்காவலில் அல்லது காவல்துறையாலும், 19 பேர் வெறித்தனமான கும்பல்களாலும்
கொல்லப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் தெய்வநிந்தனை, குற்றமாகக் கையாளப்படுகிறது.