அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாணவிகளை அனுமதிக்காதது தவறு
நவ.15,2014. இந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முக்கிய நூலகத்தில் பெண்களை
அனுமதிக்காமல் இருப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான ஒரு செயல் என வட இந்திய அலகாபாத்
நீதிமன்றம் கூறியுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆயிரக்கணக்கான பட்டயப்படிப்பு
மாணவிகள் அங்குள்ள மத்திய நூலகத்துக்குச் செல்வதற்கு நிர்வாகம் இதுவரை தடை விதித்திருந்தது. பல
ஆண்டுகளாகவே மௌலானா ஆசாத் நூலகம் என்றழைக்கப்படும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்
மைய நூலகத்திற்குள் நுழைய இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அண்மையில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Zameer Uddin Shah
கருத்து கூறுகையில், மாணவிகளை உள்ளே நுழைய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதன் காரணாமாக
மாணவர்களின் வருகை நான்கு மடங்கு அதிகரிக்க கூடும் என்றும், அதனால் ஏற்படக்கூடிய இடநெருக்கடியை
தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில்
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும்
மாணவ அமைப்பினர் வருத்தம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்துதான் தீக்ஷா திவிவேதி என்பவர்,
இந்த விவகாரம் தொடர்பான பொதுநலன் மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.