2014-11-10 15:40:30

திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்ந்துகாட்ட, பொது நிலையினருக்கு ஆயர்களின் ஆதரவு தேவை


நவ.10,2014. பொதுவாழ்வில் விசுவாசத்தை வெகுதூரம் ஒதுக்கிவைத்து விடாமல், நற்செய்தி மதிப்பீடுகளைத் தாங்கள் வாழும் சூழல்களில் வாழ்ந்துகாட்ட, பொது நிலையினருக்குப் பயிற்சியும், தொடர்ந்த ஆதரவும் வழங்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, உலகின் ஆயர்கள் உரோம் நகர் வந்து, திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' நிகழ்வை மேற்கொண்டுள்ள Senegal, Mauritania, Cape Verde, மற்றும் Guinea-Bissau நாடுகளைச் சேர்ந்த ஆயர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கு ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
அருள் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சிகளில் சிறப்புக் கவனம், மதங்களிடையே உரையாடல், குறிப்பாக, இஸ்லாம் மதத்துடன் மேற்கொள்ளவேண்டிய உரையாடலுக்கு ஊக்கமளித்தல், பாகுபாடுகள், சகிப்பற்ற நிலைகள், மத அடிப்படைவாதம் ஆகியவற்றைக் களைய முனைதல் போன்ற பணிகளைக் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கு வழங்கிய உரையில் வலியுறுத்தினார்.
தாங்கள் வாழும் நாடுகளின் அமைதிக்கும், ஒப்புரவுக்கும் பணியாற்றும் அதேவேளை, மனிதகுல முன்னேற்றம், கல்வி, நல ஆதரவு போன்ற துறைகளில் தங்கள் பணிகளை, தலத்திருஅவைகள் சிறப்புடன் தொடருமாறும் ஊக்கமளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.