சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பரிவன்பு நிறைந்த சேவையின் முக்கியத்துவத்தை உணர அழைப்பு
நவ.07,2014. பரிவன்பு நிறைந்த சேவையின் முக்கியத்துவத்தை, சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும்
தங்களின் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் மீண்டும் கண்டுணர்ந்து அத்தகைய சேவையை தங்களின்
வாழ்வுமுறையாக அமைத்துக்கொள்ளுமாறு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 06,
இவ்வியாழனன்று, சீக்கிய மதத்தினர் சிறப்பித்த குருநானக் ஜெயந்தி விழாவுக்கென உலகெங்கிலும்
வாழ்கின்ற சீக்கியர்களுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை,
இன்றைய சமூகத்தில் பரிவன்புடன்கூடிய சேவையை சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து
ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இன்றைய உலகில் வளர்ந்துவரும் பொருளின்பக் கோட்பாடும்,
நுகர்வுத்தன்மையும், தனிமனிதப் போக்கும், மனிதர்களை அதிகமதிகமாய் தன்னலவாதிகளாகவும்,
பிறரின் துன்பங்களையும், தேவைகளையும் புறக்கணிப்பவர்களாய், அவை பற்றிய உணர்வு இல்லாதவர்களாயும்
மாற்றி வருகின்றன என்றும் அச்செய்தி கூறுகிறது. கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமயங்களின்
புனித நூல்கள், தன்னலமற்ற சேவையை முக்கிய கூறாகக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள
அச்செய்தி, பரிவன்பு நிறைந்த சேவை என்பது, ஏழைகள், தேவையில் இருப்போர், நோயாளிகள், முதியோர்,
மாற்றுத்திறனாளிகள், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர், பயன்படுத்தப்படுவோர், நசுக்கப்படுவோர்
என நலிந்தவர்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்றுவதாகும் எனவும் கூறியுள்ளது. “கிறிஸ்தவர்களும்,
சீக்கியர்களும்: பரிவன்பு நிறைந்த சேவையை ஒன்றிணைந்து ஊக்குவிக்க” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள
இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran
அவர்களும், அவ்வவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.