2014-11-07 15:29:18

உலகளாவிய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தண்ணீர் மையமாக உள்ளது, ஐ.நா. உதவிப் பொதுச்செயலர்


நவ.07,2014. அனைத்து மனித உரிமைகளிலும் மிக அடிப்படையான தண்ணீருக்கான உரிமை, உலகளாவிய விவகாரங்களிலும், வளர்ச்சித்திட்ட நடவடிக்கைகளிலும் மையக் கூறாக அமைந்துள்ளது என்று ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் இலண்டனில் கூறியுள்ளார்.
இலண்டனில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள, உலக தண்ணீர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலியாசன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இன்று உலகில், தண்ணீரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைபடுவது, சண்டைகளுக்குக் காரணமாகி, அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை நம்மால் காண முடிகின்றது என்றும் கூறினார் எலியாசன்.
உலகில் 2050ம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான தேவை நாற்பது விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று எச்சரித்த எலியாசன் அவர்கள், மழைநீர் சேமிப்புச் சரியாக இல்லாததால், எண்பது விழுக்காட்டுத் தண்ணீர், யாருக்கும் பயன்படாமல் பெருங்கடல்களிலும், ஆறுகளிலும், ஏரிகளிலும் சென்று சேருகின்றன என்றும் கூறினார்.
சூடானில் நடந்த டார்ஃபூர் சண்டையின்போது, தண்ணீர், போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதையும் அம்மாநாட்டில் சுட்டிக்காட்டினார் எலியாசன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.