2014-11-05 16:14:13

ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அரசு பாதுகாக்கும் - ஈராக் பிரதமர் வழங்கிய உறுதி


நவ.05,2014. ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களை அந்நாட்டு அரசு பாதுகாக்கும் என்று ஈராக் பிரதமர் Haider al Abadi அவர்கள், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்களிடம் கூறினார்.
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தலைமையில், ஈராக் பிரதமர் Abadi அவர்களை, பாக்தாத் நகரில் அண்மையில் சந்தித்தபோது பிரதமர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஈராக் நாட்டை விட்டு கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேறி வருவதற்கு தன் வருத்தங்களைத் தெரிவித்த பிரதமர் Abadi அவர்கள், கிறிஸ்தவர்களைக் காப்பது தன் கடமை என்பதை இச்சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்தினார் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு வழியல்ல என்பதைக் கூறிய பிரதமர் Abadi அவர்கள், கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் நல்லுறவு கொள்வதற்கு வேறுபல வழிகளையும் மேற்கொள்வது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் Abadi அவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்ற கருத்து மக்களிடையே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தந்த வாக்குறுதியைக் கேட்டு, தனக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாக எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / Zenit








All the contents on this site are copyrighted ©.