2014-11-04 15:09:23

புர்க்கினோ ஃபாசோ நாட்டுக்காக ஒரு வாரச் செபங்கள், தலத்திருஅவை


நவ.04,2014. புர்க்கினோ ஃபாசோ நாட்டில் நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த அரசுத்தலைவர் Blaise Compaore அவர்கள் பதவி விலகியுள்ள நிலையில், நாட்டினர் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர்.
மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்க்கினோ ஃபாசோவை கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுத்தலைவர் Compaore அவர்கள், பொதுமக்களின் கிளர்ச்சியால் பதவியைத் துறந்து ஐவரி கோஸ்ட் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளார். தற்போது புர்க்கினோ ஃபாசோ நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அரசுத்தலைவர் காவல் அமைப்பின் உதவித் தலைவர் அதிபர் Isaac Yacouba Zida அவர்கள், இடைக்கால அரசின் தலைவர் என்று, தன்னை இம்மாதம் முதல் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் ஒப்புரவும், நீதியும், அமைதியும் நிலவுவதற்காக, செப வாரம் ஒன்றை அறிவித்துள்ள அந்நாட்டுக் கர்தினால் Philippe Ouédraogo அவர்கள், புதிய இராணுவ ஆட்சியாளர்கள் சனநாயகத்தை மதிப்பதற்கு உறுதி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, புதிய அரசுத்தலைவரான அதிபர் Zida அவர்கள், அந்நாட்டின் கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும்பிற சமயத் தலைவர்களை இத்திங்களன்று சந்தித்து புதிய இடைக்கால அரசு நிர்வாகத்துக்கு ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் என, ஆயர் பேரவை பேச்சாளர் ஜோசப் கின்டா அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.