திருத்தந்தை : இறைவனால் வழங்கப்படும் இலவச மீட்புப் பற்றி அஞ்ச வேண்டாம்
நவ.04,2014. இறைவனால் கொடையாக வழங்கப்படும் மீட்புப் பற்றி அஞ்ச வேண்டாம், இம்மீட்பு
தன்னலத்தைக் கைவிடவைக்கின்றது என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பெரிய
விருந்துக்கு ஏற்பாடு செய்த மனிதர் ஒருவர், அவ்விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்களை அழைத்தபோது,
ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி அழைப்புப் பெற்றவர்கள் வர மறுத்தது பற்றிக் கூறும் இந்நாளைய
நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். மனிதர்
ஒவ்வொருவரின் இதய ஆழத்திலும் இறைவனின் இலவசக் கொடை பற்றிய பயம் இருக்கின்றது, அதனால்
நாம் இறைவனிடம் செல்வதற்குச் சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்கிறோம், இறுதியில் உலகமே
நம்மைச் சுற்றி இருக்கின்றது என்ற நினைப்பில் இது கொண்டுபோய்ச் சேர்க்கின்றது என்றும்
கூறினார் திருத்தந்தை. நாம் அனைவரும் விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள்போல் இருக்கிறோம்,
ஆனால் இவ்விருந்து பற்றி ஏதோ நினைத்ததால், மூன்று பேர் இவ்விருந்தை விரும்பவில்லை, இந்த
மூன்று பேர் போன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உள்ளோம் என்று மேலும் கூறினார் திருத்தந்தை. நம்
வீடுகளை விட்டு, இறைவனின் இல்லத்திற்கு மற்றவர்களோடு செல்வதற்கு கிடைக்கும் அழைப்புக்குப்
பதில் சொல்வதற்கு நாம் பயப்படுகிறோம், அதேநேரம், நம் பாவங்களிலும், நம் வரையறைகளிலும்
பாதுகாப்பை உணருகிறோம் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, இந்தப் பயம் கிறிஸ்தவர்களாகிய
நம் அனைவருக்குள்ளும் ஆழமாக உள்ளது என்றும் கூறினார். நாம் கத்தோலிக்கராய் உள்ளோம்,
ஆனால் உறுதியான கத்தோலிக்கராய் இல்லை, இயேசுவில் நம்பிக்கை வைக்கிறோம், ஆனால் அதிகமாக
அல்ல, இருக்கிறோம், ஆனால் இல்லை என்ற இந்த நிலை நம்மைச் சிறுமைப்படுத்துகின்றது என்று
கூறினார் திருத்தந்தை. விருந்துக்கு ஏற்பாடு செய்த மனிதர், ஏழைகளையும் மற்றவர்களையும்
விருந்துக்கு வருவதற்கு கட்டாயப்படுத்தியது போன்று, இயேசு நம்மிலும் பல சோதனைகளால் அவ்வாறு
செய்கிறார், இதோ இலவசமான கொண்டாட்டம் என்று இயேசு கட்டாயப்படுத்துகிறார், இது மாபெரும்
கொடை, இது இறைவனின் அன்பு என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.